Saturday, August 4, 2018

குருப் பெயர்ச்சி பலன்கள் - 2018 - 19 - சிம்மம்



குருப் பெயர்ச்சி பலன்கள் - 2018 - 19 - சிம்மம்




சிம்மம்


( மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
                தந்தை காரகனான சூரியனை அதிபதியாகக் கொண்ட நெறிமுறைகளுடன் வாழ்பவரும், தனக்கென ஒரு தனி வழி அமைத்துக் கொள்பவரும், தன்னம்பிக்கை மிக்கவருமான சிம்மராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குருப் பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். பொதுப் பலன்கள், பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி நண்பர்களுக்கும் சீரான சிறப்பான பலன்களே அமையும்.

       தங்கள் இராசிக்கு புத்திர பாவாதிபதி மற்றும் ஆயுள் ஸ்தானாதிபதியுமான குருசுக பவமான விருச்சிகத்திற்கு புரட்டாசி மாதம் 18 ஆம் நாள், வியாழக் கிழமை, 04 – 10 – 2018 அன்று மாறுகிறார். குரு நான்கில் வந்த போதுதானே தர்ம புத்திரர் உறவுகளை வைத்து சூதாடி சொத்துக்களை இழந்து  வனவாசம் சென்றார். அதுபோல் இன்றைய நிலையில் வீண் சூதாட்டம், போட்டி பந்தயங்கள் ஆகியவற்றில் ஈடுபட்டு இழப்புக்களை சந்திக்க நேரலாம். இதன் காரணமாக மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம். பண இழப்புகளைத் தவிர்க்க இவற்றில் ஈடுபடாதிருப்பது நல்லது. பண இழப்பு ஏற்பட்டால் மனக்கவலை அதிகமாகும்தானே, குடும்பத்தில் நிம்மதி குறையும் தானே ? கவனமாக இருங்கள். 4 ஆம் வீடு என்பது 3 க்கு இரண்டாம் வீடாவதால் இளைய சகோதரர் மூலமாக தன வருமானங்கள் இருக்கும். 5 க்கு விரயம் ஆதலால் சந்தோஷம் குறையும், குழந்தைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். சுற்றங்களை அனுசரித்துச் செல்வது நல்லது. நான்கு கால் பிராணிகளிடம் எச்சரிக்கை தேவை.  சிலருக்கு அவமானங்கள் ஏற்பட்டு, மதிப்பு, மரியாதைகள் குறையும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்குப் பணியினில் சிக்கல்களும், வருமானக் குறைவுகளும் ஏற்படும். காதல் விவகாரங்களில் வீண்பழி சுமத்தப்படலாம். பிறர் செய்த குற்றத்திற்காக பழி சுமத்தப்பட்டு தேவையற்ற தண்டனைகள் கூட சிலருக்குக் கிடைக்கலாம்.  மாணவர்கள் கல்வியில் நன்கு கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில், பின்னடைவுகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். அரசுக்கு விரோதமான செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது. வெளி மாநிலங்களில்  சென்று வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வெளி நாட்டில் வேலை பார்த்தவர்கள் தாய்நாடு திரும்பு நேரிடும். புதிய தொழில் வாய்ப்புகள் சிரமத்திற்குப் பிறகே ஏற்படும். உயர்கல்வி படிப்பவர்கள் கவனச் சிதறல்களுக்கு ஆளாகாமல் கவனமாகப் படித்தாலே தேர்ச்சி பெற முடியும். நல்ல நட்புக்களை நாடிச் செல்வதே நல்லது. தச்சு வேலை, கட்டிட வேலைப் பணியாளர்கள் வீட்டைவிட்டு பிரிந்து வேறு இடத்தில் வேலே செய்ய வேண்டியதிருக்கும.
       குரு தனது 5 ஆம் பார்வையால் 8 ஆம் இடத்தைப் பார்வை செய்கிறார். இதன் பலனாக நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த வழக்கு, வியாஜ்யங்கள் வெற்றி அடையும். மர்ம ஸ்தானத்தில் ஏற்பட்ட நோய்கள் மறையும். மரண பயம் விலகி ஆயுள்பலம் உண்டாகும். மனைவி மூலமாக வரும் தனத்துக்குப் பஞ்சம் இராது. தடைகள் விலகி மணமாலையும் மஞ்சளும் கூடி, மங்கையர் மண மேடையில் உலாவரும் பாக்கியம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் வெகுவாகக் குறையும்.  உடல் பாதிப்பால் அறுவை சிகிச்சைக்கான வாய்ப்புகள் ஏற்படும். அதை தைரியமாக மேற்கொண்டு சுகம் பெறலாம்.
       குரு தனது 7 ஆம் பார்வையாகப் 10 ஆம் இடத்தைப் பார்வை செய்கிறார் இதன் காரணமாக தேறாது என முடங்கிய தொழில்கள் கூட துளிர்த்து எழும். உத்தியோகம், வியாபாரம் ஆகியவை புத்துயிர் பெறும். பதவி உயர்வு உங்களைத் தேடிவரும். வேலை தேடி அலைபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கை கூடிவந்து மகிழ்ச்சி தரும். நீண்ட நாட்களாக முயற்சித்து வந்த வங்கிக் கடன் உதவிகள் உடனடியாகக் கிடைக்கும். தொழில் வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு நல்ல முன்னேற்றத்துடன் இருக்கும். புத்தி சாதுர்யமும், அறிவும் விருத்தியாகும். அரசு மூலம் வெகுமதிகள் கிடைக்கும். சிலர் இராஜ தந்திரத்தால் அரசியலில் உயர் பதவிகளை அடைவர்.
      குரு தனது 9 ஆம் பார்வையாக 12 ஆம் இடமான விரயபாவத்தைப் பார்வையிடுவதால். உண்ண உணவு, சுகமான நித்திரை ஆகியவற்றிற்கு எவ்விதக் குறையும் இருக்காது. கோர்ட், கேஸ் விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகி வெற்றிக் கொடியை நாட்டுவீர்கள்.  கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருந்த கணவன் மனைவி இணையும் நாள் வெகுதூரத்தில் இல்லை. குடும்பத்தில் நிலவி வந்த சிறு பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து மகிழ்ச்சி உண்டாகும். மணவாழ்க்கையும் மகிழ்ச்சி நிறைந்ததாக அமையும்.

                  சிம்ம இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி உலோக மூர்த்தியாக நான்காம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு இரும்பினாலான விவசாய, பொறியியல் உபகரண சேர்க்கை உண்டாகி குறைந்த அளவு நன்மை அளிக்கும். இரும்பினாலான்ன உபகரணங்கள், பொருட்களை உழவாரப் பணிக்கு, ஆலயங்களுக்குக் காணிக்கையாக செலுத்துவது நல்லது. இந்த இராசியினருக்கு பொது மற்றும் சிறப்பு விதிகளின்படி பெருமளவு நன்மைகள் குறைவாகவே இருக்கும். 50%


 ஒவ்வொரு வியாழக் கிழமையும், குரு ஹோரையில், தொடர்ந்து 12 வாரங்கள் குரு ஸ்தோத்திரத்தை 108 முறை பாராயணம் செய்து, மஞ்சள் வர்ண மலர்களால் அர்ச்சித்து வழிபாடு செய்ய நற்பலன்கள் சித்திக்கும்.

No comments:

Post a Comment