Friday, August 3, 2018

குருப் பெயர்ச்சி பலன்கள் 2018-19 - மிதுனம்



குருப் பெயர்ச்சி பலன்கள் 2018-19 மிதுனம்




மிதுனம்



(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
        கல்விக் காரகனான புதனை அதிபதியாகக் கொண்ட புத்திகூர்மையுடைய, இரசிப்புத் தன்மையும், சகிப்புத் தன்மையும் மிக்க மிதுனராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குருப் பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். பொதுப் பலன்கள், பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி நண்பர்களுக்கும் சீரான சிறப்பான பலன்களே அமையும்.
         தங்கள் இராசிக்கு களத்திர, கர்ம பாவதிபதியான குரு இதுநாள்வரை தங்களின் புத்திர, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்துபுரட்டாசி மாதம் 18 ஆம் நாள், வியாழக் கிழமை, 04 – 10 – 2018 அன்று ருண, ரோக, சத்ரு பாவத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் ஆரோக்கியக் குறைவினை ஏற்படுத்தலாம். எதிரிகளின் தொல்லைகளால் இடர் பட நேரும். தேவையற்ற கடன்கள், அதன் காரணமாக கடன் கொடுத்தவர்களின் தொல்லைகள் ஏற்படலாம். சமூகத்தில் செல்வாக்கும், சொல்வாக்கும் இழக்க நேரிடலாம். பகைவர்களின் பலம் கூடும். அதனால் உங்கள் முகம் வாடும். மனைவியால் ஆதாயம் ஏற்படும். மக்களால் விரயங்கள் ஏற்படும். அவர்களின் கல்வி செலவுக்காக்க் கடன் வாங்க நேரும். இனிய நண்பர்கள் கூட வலிய எதிரிகளாக மாறுவர். ஆரோக்கியக் குறைவினால் தொழில் துறையில் உள்ளவர்களுக்குச் சிக்கல்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் எதிர்பாராத நஷ்டங்கள் ஏற்படலாம். எனவே, எந்தவொரு புதிய முயற்சிகளிலும் ஈடுபடாதிருப்பது நல்லது. உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு பிறர் பொறாமை கொள்ள நேரலாம். எனவே, அடக்கி வாசிப்பது நல்லது. வேலை இல்லாதவர்கள் ஏதேனும் சிறுதொழில் செய்வது முன்னேற்றம் தரும். சிலருக்குக் குறிக்கோளற்ற அலைச்சல்களால் உடல் அசதி அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்களின் சூழ்ச்சிகளால் அதிகாரிகளுக்கு நெருக்கடிகள் உண்டாகும். பிறருக்குக் கட்டளையிடும் அரசு உயர் பதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆரோக்கியக் குறைவு காரணமாக மாணவ, மாணவியருக்குக் கவனக்குறைவு ஏற்பட்டு கல்வி, விளையாட்டுப் போட்டிகளில் பின்னடைவு ஏற்படலாம். பகைவர்களின் சூழ்ச்சியால் அரசியலில் வஞ்சனைகளும், துரோகங்களும், தொல்விகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையுடன் செயல் படுவது ஏமாற்றங்களைத் தவிர்க்கும். உதாசினப்படுத்தும் உறவுகளின் செயல்பாடுகள் மனவருத்தம் அளிக்கும். வீண் பழிகளால் வேதனைப்பட நேரும். அப் பழியால் சிலர் மாமியார் வீட்டுக்குக் கூடப் போக நேரலாம்.

       குரு தனது 5 ஆம் பார்வையாக 10 ஆம் பாவமான கர்மஸ்தானத்தைப் பார்வையிடுவதால் புதிய தொழில் துவங்கும் வாய்ப்புகள் ஏற்படும். தொழில் விரிவாக்கங்கள் சாத்தியப்படும். குடும்பத்தில் சந்தோஷ சூழ்நிலைகள் உருவாகும். சுபகாரியங்களுக்குக் குறைவிருக்காது. மனைவியின் செயல்படுகள் சிறந்து, காரியம் யாவினும் கை கொடுப்பார். இனிமை மிக்க இனிய செய்திகள் இல்லம் வந்து சேரும். தந்தை வழியில் தனவரவு உண்டு. மூத்த சகோதர்ர்கள் இல்ல விழாக்கள் மூலமாக இன்பம் ஏற்பட்டாலும்  பொருட்செலவுகளும் ஏற்படும். நண்பர்கள் தங்கள் பகை மறந்து உதவிக் கரத்தை நீட்டுவர்.
       தனது 7 ஆம் பார்வையால் விரய பாவத்தை பார்வை இடுவதால் மூத்த சகோதரர்களால் ஆதாயம் உண்டு. வெளிநாட்டு வாய்ப்புகள்  கதவைத் தட்டும். வீட்டில் புத்தாடைகளுக்கான செலவுகள் செய்து மகிழ்வீர்கள். மனைவியின் சிறப்பான, ஆரோக்கியமான உடல் நிலை காரணமாக உறவுகளில் முன்னேற்ற நிலை ஏற்படும். மகிழ்ச்சியும் நிலவும். பெற்றோர்களின் நிலை சிறப்பாக இருக்கும். அவர்கள் புனித யாத்திரைகள் செல்லும் வாய்ப்புகள் ஏற்படும்.
       தனது 9 ஆம் பார்வையாக தன பாவத்தைப் பார்வையிடுவதால் ஏதாவது ஒரு வழியில் குடும்பத்தினர் மூலமாக பணவரவுகள் வந்து கொண்டே இருக்கும். வீட்டில் சுபகாரியங்கள் சிறப்பாக நடக்கும். மணம் ஆகாதவர்களுக்கு திருமணம் இனிதே நடக்கும். மணம் ஆனவர்களுக்கு தம்பதிகளிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து களிப்பு எய்துவர். பெற்றோர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பீர்கள். கொடுத்த வாக்குகளை தவறாமல் காப்பாற்றிவிடுவீர்கள்.

 மிதுன இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி ரஜத மூர்த்தியாக மூன்றாம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு வெள்ளி ஆபரணங்கள், பாத்திரங்கள் ஆகிய சேர்க்கை உண்டாகி நன்மை அளிக்கும். பொது மற்றும் சிறப்பு பலன்களின்படி இவர்களுக்கு இந்த குருப் பெயர்ச்சி சுமாரான  பலனகளையே தரும். 70%


       ஒவ்வொரு வியாழக் கிழமையும், குரு ஹோரையில், தொடர்ந்து 12 வாரங்கள் குரு ஸ்தோத்திரத்தை 108 முறை பாராயணம் செய்து, மஞ்சள் வர்ண மலர்களால் அர்ச்சித்து வழிபாடு செய்ய நற்பலன்கள் சித்திக்கும்.


No comments:

Post a Comment