Showing posts with label ஆதி சங்கர் கூறும் ஆன்ம ஞானம்.. Show all posts
Showing posts with label ஆதி சங்கர் கூறும் ஆன்ம ஞானம்.. Show all posts

Friday, February 6, 2015

ஆதி சங்கர் கூறும் ஆன்ம ஞானம்.



ஆதி சங்கர் கூறும் ஆன்ம ஞானம்.

       அஞ்ஞானமாகிய இருள் நிரம்பிய வாழ்க்கை எனும் காட்டில் அலைகின்ற மனிதர்கள் ஆத்யாத்மிகம், ஆதிதெய்வீகம், ஆதிபௌதிகம் ஆகிய மூன்றுவித தாபங்களாகிய காட்டுத் தீயினால் எரிக்கப்பட்டுத் துன்பம் அனுபவிக்கின்ற காலத்தில் அவர்களை அனுக்கிரகம் செய்ய கருணை வடிவாகிய சிவபெருமான் ஶ்ரீ சங்கராச்சாரியார் உருவத்தில் தொன்றி அருள் புரிந்தார்.

       முதலில் தக்ஷிணாமூர்த்தி தேவராக ஆலமரத்தின் ஆடியில் வீற்றிருந்து, மௌன விரதத்தில் இருந்துகொண்டே வாமதேவர் முதலிய மாமுனிவர்களுக்கு ஆத்ம தத்துவத்தை உபதேசித்து அவர்களுடைய சந்தேகங்களையும் மௌனத்தினாலேயே அறவே அறுத்த அந்தப் பரமசிவன், காலத்தின் கொடுமையினால் நிலவிய ஆஸ்திக மதத்தின் அழிவை அறிந்து தேவர்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கிஇனிமேல் மௌனம் தகாது ” – என்று தீர்மானம் செய்து பரமாச்சாரியாராக மண்ணுலகில் தோன்றி ஆஸ்திக மதத்தை உய்வித்துக் காத்து ஞான மார்க்கத்தையும் நிலை நாட்டினார்.

       ஸ்ரவணம், மனனம், நிதித்யாசனம் என்ற முறைப்படி பிரம்ம சூத்திர பாஷ்யம், பத்து உபநிஷத்துக்களுக்கு பாஷ்யம் பகவத் கீதா பாஷ்யம் ஆகிய சிறந்த நூல்களையும் இயற்றி சீடர்களுக்கு உபதேசம் செய்து, மற்ற மதங்களையும் வென்று, ஆத்ம வித்தையைப் பிரதிஷ்டை செய்தல் முதலிய அரிய செயல்களைத் தன்னுடைய அற்பமான, அற்புதமான வாழ் நாளிலேயே நிறைவேற்றினார்.

       இது வியக்கத்தக்கது மட்டுமின்றி , இத்தகைய செயல்கள் சாதாரண மனிதப் பிறவியால் செய்ய இயலாத ஒன்று என்பது ஆஸ்திகப் பெரியவர்கள் அனைவரும் ஒப்புக் கொள்ளக்கூடிய விஷயமாகும். அத்தகைய மனித தெய்வத்தை, சிவ பெருமானுடைய அவதாரமாகக் கூறுகின்றனர். இந்த விஷயத்திலும் ஆஸ்திகப் பெருமக்கள் ஐயம் கொள்ளுவதில்லை.

       வேதம் முதலியவற்றைக் கற்காத சாதாரண மனிதனும் ஆத்ம தத்துவத்தைப் பற்றிய அறிவு பெறவேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் அதிகார பேதத்தைப் பின்பற்றி மிகக் கடினமான விஷயங்களையும் இனிய சொற்களாலும், செயுட்களாலும் தொகுத்து, உலகப் பற்றற்ற துறவியாகவே சஞ்சாரம் செய்து, தர்ம நெறியையும், ஞான மார்க்கத்தையும் காப்பாற்றினார் என்றால் உலகத்தை உய்விக்க வேண்டும் என்ற ஒரு பயனை மட்டுமே கருத்தில் கொண்டு திகழ்ந்த பரமாச்சாரியாருடைய வள்ளல் தன்மையை வர்ணிக்க வார்த்தைகள்தான் உண்டோ ?

       ஆஸ்திகப் பெருமக்களே ! ஸர்வஞர் ஆகிய அந்தப் பரமாச்சாரியார் இயற்றிய நூல்கள் அனைத்தையும் ஒருவன் இந்த மனிதப்பிறவியில் படித்து அறிந்து அதன்படி நடக்க வேண்டும் என்ற எண்ணம், ஒவ்வோருவருக்குள்ளும் எழவேண்டும் என்பதே இந்தப் படைப்பின் முக்கிய நோக்கம் ஆகும்.

       பரமாச்சார்யாரால், இனிய மொழிகளில் எழுதப்பட்ட பலவிதமான ஸ்தோத்திரங்கள், படிப்பவர்களுடைய விருப்பங்களைப் பூர்த்தி செய்பவையாகவும், மனதை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துபவையாகவும் உள்ளன என்றால் மிகையாகாது.

       உபநிஷத்துக்களின் சாரம்பிரகரணங்கள்என அழைக்கப்படுகின்றன. பல நூல்களால் அதன் போதனைகளை வெளிக் கொணர்ந்துள்ளார். சாத்திரங்களில் அதிகப் பயிற்சி இல்லாதவர்களுக்கும் இந்தப் பிரகரணங்கள் அறிவைப் புகட்டுகின்றன. அவ்வாறு இயற்றப்பட்ட பிரகரண நூல்களில் ஒன்றாகியப்ரபோத் சுதாகராஎன்பது மிகவும் இனிய செய்யுட்களால் தொகுக்கப்பட்டுள்ளதுமனிதன் அனைத்து விஷயங்களிலும் உள்ள குறை நிறைகளை நன்கு உணர்ந்து அதிலிருந்து அடைய வேண்டிய உண்மையான அறிவை அடைவதற்கு முயற்சிக்க வேண்டும் எனத் தனது நற்சுவை நிரம்பிய வார்த்தைகளால் ஆச்சாரியார் தனது உபதேசங்களை அளித்துள்ளார்.

       19 உட்பிரிவுகளைக் கொண்ட இந்நூல் உடல், உள்ளம், பிராணன், பொறிகள் என்பவைகளைக் காட்டிலும்ஆத்மா வேறு என்றும் நன்கு உணர்த்தி மனது தியானம் செய்யவேண்டிய பரம்பொருளைப் பற்றியும் விளக்குகிறது. “ பக்தி இன்றி முக்தி இல்லைஆதலால் அந்த பக்தியின் சிறப்பையும் நன்கு உபதேசிப்பதுடன், ஸகுண பக்தி, நிர்குண பக்திக்குக் காரணம் ஆகிறது என்பதையும் பல உதாரணங்கள் மூலமாக நன்கு விளக்குகின்றது.

     ஶ்ரீமத் பாகவதத்தில் உள்ள பிரம்ம ஸ்துதியில் பகவான் ஶ்ரீ கிருஷ்ண பிரானுக்கு ஒரு பக்தனிடம் இவன் என்னைச் சேர்ந்தவன் என்ற பிரியம் எப்போது உதயம் ஆகின்றதோ அப்போது அவனுடைய காமம், வெகுளி முதலிய தோஷங்கள், உறவுக்கும், துன்பங்களுக்கும் காரணமாய் சிறைக்கு இணையான இல்லம் மற்றும் காலுக்கு விலங்காகிய விவேகமற்ற தன்மை ஆகியவகைகளெல்லாம் அந்த பக்தனை விட்டு விலகிவிடுகின்றன. அத்தகைய அபிமானம் அந்த ஜீவனிடத்தில் பரமனுக்கு ஏற்படுவதற்கு, அந்த பக்தனின் இடைவிடாத பக்தியெனும் அன்பேயாகும். ஆகவே பக்தனுடைய எல்லாச் செயல்களும் பகவானையே குறியாகக் கொண்டவையாகும். இந்தத் தீராத பக்தி காரணமாக அவன் பேரின்பத்தை அடைகிறான். இந்த விஷயங்கள் அனைத்துமே அருமையாக பரமாச்சாரியாரால் விளக்கப்பட்டுள்ளன. இதன் தமிழாக்கம் வேதாந்த சிரோன்மணி என். எஸ். அனந்தகிருஷ்ண சாஸ்திரிகளால் மிக அழகாகச் செய்யப்பட்டுள்ளது. அதன் இனிய சாற்றினை பகவன் நாமம் சொல்லிப் பருகுவோமாக.

ஆத்ம ஞானாம்ருதக் கடல்

தேக நிந்தைப் பிரகரணம்.

       நித்ய ஆனந்த ரூபனாய், சத்தாய், சித்தாய் தானாக விளங்கும் பிரகாசமான ஒளிமயமான உருவமாகவும், சரீரங்களாகிய புறங்களில் வசிக்கும் சிறந்த புருஷனாகவும் (அழிவின்மையால் உலகம் தோன்றுவதற்கு முன்னமேயே இருக்கின்றவரும்) பிறப்பற்றவரும்,  உலகங்களுக்கு எல்லாம் ஈஸ்வரனும், யாதவர்களுடைய நாயகனுமாகிய ஶ்ரீ கிருஷ்ண பரமாத்வை வணங்குகிறேன்.

       எந்த தேவனை, கிருஷ்ணனை வர்ணிப்பதற்கு வேதம் கூட ஊமையாகின்றதோ, அப்படிப்பட்டவர், அற்ப மனிதர்களாகிய நம்முடைய வர்ணனைகளுக்குப் பொருளாகக் கண்ணபிரான் இருக்க முடியுமா ?

       இது தெரிந்த விஷயமே. ஆயினும் ஆத்மாவின் தத்துவங்களை போதிக்கும் வேதத்தின் வார்த்தைகளை முக்கியமாகக் ஹரியினுடைய தியானம், கூட்டுப் பிரார்த்தனை இவைகளின் தொடர்ச்சியினால் அந்த பரந்தாமன் ஞானிகளால் கூறப்படுகிறார் என்பதில் சந்தேகம் இல்லை.

       தொடர்ச்சியான பயிற்சி, ஞானம், பக்தி முதலான பல வழிகள் இருந்த போதும், வைராக்கியம் என்ற ஒன்று  இன்றி இந்த மானுடப் பிறவிக்கு மோட்சத்திற்கு வழி கிடையாது.

       மோட்சத்திற்கு மூல காரணங்கள் மூன்று உண்டு. அவையாவன வைராக்கியம், ஆத்மஞானம் மற்றும் பக்தி மார்க்கம் ஆகியவை ஆகும். இதில் வைராக்கியம் என்பது பற்றற்ற தன்மையெனக் கூறப்படுகிறது.

       அந்த வைராக்கியம் நான் என்றும், என்னுடையது என்றுமாகிய அகங்கார வார்த்தைகள்  மனிதனின் எல்லாப் பிறவிகளிலும் மறைந்துள்ளது. தன்னுடைய உடலில் நான் என்ற எண்ணம் அகந்தை என்றும், எனது மனைவி, மக்கள்  ஆகிய மற்ற உறவுகளில் என்னுடையது என்ற எண்ணம் மமதை என்றும் கூறப்படுகிறது. இத்தகைய இரு எண்ணங்களால் வைராக்கியம் தடைப்பெற்றதாக இருக்கின்றது.

       இந்த உடல் எத்தகையது ? கண்ணுக்குப் புலப்படும் பொருள்களுடன் இந்த உடலுக்கு உண்டான தொடர்பு என்ன ? என்ற விஷயத்தை நன்கு ஆராய்ந்து அறிந்து கொண்டால் மேல் கூறப்பட்ட அகங்கார மமகாரங்கள் என்ற அகம்பாவம் நீங்கிவிடும்.

       ஆண், பெண் ஆகிய இருவரின் உறவில் உருவாகிற ஒரு ஜீவன், தன்னுடைய முன் ஜன்ம வினையினால் தனக்குரிய பிறப்பை அடைகிறான்.

       கபம், சிறுநீர், மலம் போன்ற அசுத்தமான பொருள்கள் நிரம்பிய தாயின் கர்ப்பப் பையாகிய பெரிய குகையில் அந்த ஜீவன் ஜடாக்னியின் ஜ்வாலைகளால் ஒன்பது மாத காலம் தாபத்தை அனுபவிக்கிறான்.

       பிரசவ காலத்தில் குழந்தைக்கு நேரம் சரியில்லை என்றால், அது குறுக்காக விழ நேரும் போது மருத்துவரால் கத்தி முதலிய அறுவை சிகிச்சைக்கான கருவிகளால், வயிறு கிழிக்கப்பட்டு நிர்பந்தமாக வெளியேற்றப்படும் நிலை அதற்கு ஏற்படுகிறது.

       அப்படியில்லாவிடினும் பிரசவ காலத்தில் காற்றின் சக்தியால் யோனி துவாரத்தில் இருந்து வெளிவரும் போது உண்டாகிற துக்கம் சொல்லிமாளதது.

       பிறந்த பிறகு ஒருவனுடைய வாழ்க்கையில் மனக் கஷ்டம், நோய், உறவுகளின் பிரிவு, ஆபத்து, கலகம், நீண்ட காலத்து வறுமை ஆகியவற்றினால் உண்டாகும் இன்னல்கள் கூறத்தக்கவையா ?

       வினைகளால் கட்டுப்பட்டவனாக ஜீவன், மனிதன், விலங்கு, பறவை என என்பத்து நான்கு இலட்சம் பிறவிகளில் பிறந்து பற்பல துன்பங்களை, துக்கங்களை அனுபவிக்கிறான்.

       அப்பிறவிகளில் கடைசியானதான மனிதப் பிறவியே சிறந்தது. அதிலும் சிறந்த குலத்தில் பிறத்தல், தன்னுடைய குல ஆசாரங்களைக் கடைப்பிடித்தல், அதிலும் வேதங்களின் கருத்துக்களை உணர்ந்து, அதன்படி நன்னெறியில் நடப்பதென்பது மேன்மேலும் சிறந்தது.

       இப்படி இருக்கையில் ஆத்மா, அனாத்மா என்பவைகளைப் பற்றிய அறிவு இன்றியும், இந்த உடலானது அழிந்து நாசமடையக் கூடியது என்ற அறிவின்றியும் இருந்தால் அவர்கள் அறிவாளிகளாக இருந்தாலும், அவர்களால் தங்களுடைய ஆயுள் வீணாகவே கழிக்கப்படுகின்றது.

       ஆயுளின் ஒவ்வொரு கணத்திலும், ஒரு சிறு அளவு கூட, கோடிக்கணக்கான பொன்னை கொட்டிக் கொடுத்தாலும் திரும்பக் கிடைக்காது. அத்தகைய வாழ்க்கையில் நாட்கள் முழுவதையும் வீண்டிக்கப்பட்டால் அதைக்காட்டிலும் பெரிதான கஷ்டம் யாது ?

       மானுடப் பிறவியை வீணாகக் கழித்து அதன் பயனாக மிருகங்கள் முதலிய பிறவிகளில் பிறந்தால் தன்னுடைய உடலைப் பற்றியே அறிந்து கொள்ளத் திறமையற்ற அப்பிறவிகளில் ஆத்ம தத்துவத்தை உணர்வது அரிது என்பதுபற்றிக் கூறவும் வேண்டுமோ ?

       எப்பொழுதும் மனிதர்களால் வண்டிகளில் கட்டி பழுக்களைச் சுமந்து, இழுக்கச் செய்யும் எருதுகள், குதிரைகள், கழுதைகள், யானைகள், கடாக்கள், முதலிய மிருகங்கள் பசியினால் வருந்தி மிகவும் களைப்புற்ற போ
திலும், தன் கஷ்டங்களை வெளியில் கூறமுடியாத நிலையில் உள்ளன அன்றோ ?

       இந்த உடல் இரத்தம், வாதம், பித்தம், கபம், கொழுப்பு, மாமிசம், எலும்பு இவைகளால் உருவானது. அது வெளியே தோலினால் மூடப்பட்டு இருப்பதினால் காகங்களால் சாப்பிடப்படுவதில்லை.

       கபம், மலம் முதலியன மூக்கின் துவாரங்களில் இருந்தோ, வாய், அபானத் துவாரம் வழியாகவோ வெளியே வரும்போது அதைக்கண்டு மனிதன் அருவருப்பு அடைகிறான். ஆனால், உடலின்னுள்ளே இவைகள் இருப்பதை நினைக்கின்றதில்லை.

       நகம் தொட்டு கூந்தல்வரையில் இந்த உடல் துர்நாற்றப் பொருள்கள் நிறைந்தது. அப்படிப்பட்ட இந்த உடலை, அகில், சந்தனம், பச்சைக் கற்பூரம் முதலான வாசனைப் பொருட்களைத் தடவி வாசனை உள்ளதாகச் செய்ய முயலுகின்றான்.

       இயற்கையில் உள்ள குற்றக் குவியலை மிக்க முயற்சி எடுத்து மறைக்க முயலுகின்றான். செயற்கையினால் குணங்கள் இருப்பதாகக் காண்பித்துப் புகழ்கிறான். அவன் மூடன்.

       உடலில் இரணம் ஏற்பட்டு, சீழ் வைத்து சுத்தம் செய்யாவிட்டால், துர்நாற்றத்துடன், அதில் புழுக்களும் நெளிகின்றன.

       மலர் பஞ்சணையில் படுத்து மகிழ்வுற்ற உடல், மரணமெய்தும்போது, மூங்கிலில் கயிறு ஆகியவற்றால் கட்டப்பட்டு நெருப்பில் எரிக்கப்படுகிறது.

       சிம்மாசனத்தில் வீற்றிருந்த எந்த அழகிய உடலைப் பார்த்து உலகம் சந்தோஷமடைந்ததோ, அந்த உடல் காலனால் இழுக்கப்பட்டு உடலை விட்டு உயிர் நீங்கியபின் பிணம் என்று பெயர் வைக்கப்பட்டு, அதைப்பார்த்து இவ்வுலகம் வெறுப்பினால் கண்களை மூடிக்கொள்கின்றது.

       இவ்வாறு மிகவும் அசுத்தமான உடல் யாருடைய தொடர்பினால் அசைகின்றதோ, அப்படிப்பட்ட ஆத்மாவே பரம்பொருள், பரமாத்மா என அழைக்கப்படுகிறார். அந்தப் பரந்தாமனை மறந்து இந்த அழியக்கூடிய தேகத்தில் நான் என்ற எண்ணத்தை மூடன் வளர்த்துக் கொள்கிறான்.

       சச்சிதானந்த ரூபியான ஆத்மா எங்கே ? மாமிசம், இரத்தம், எலும்பு இவைகளால் அமையப்பெற்ற உடல் எங்கே ? -- என்பதை உணர்ந்து இவ்விரண்டையும் ஒன்றாக எண்ண வெட்கப்படுகின்ற அறிவாளி, எப்படி ஆத்மாவிலும் வேறான உடலை ஆத்மாவாக எண்ணுவான் ?