Showing posts with label இராகு - கேது பெயர்ச்சி பலன்கள் துலாம் முதல் தனுசு வரை. Show all posts
Showing posts with label இராகு - கேது பெயர்ச்சி பலன்கள் துலாம் முதல் தனுசு வரை. Show all posts

Tuesday, July 11, 2017

இராகு - கேது பெயர்ச்சி பலன்கள் துலாம் முதல் தனுசு வரை

இராகு - கேது பெயர்ச்சி பலன்கள்
துலாம் முதல் தனுசு வரை



துலாம்
(சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)

       அசுர குருவான சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு 17/18 - 08 - 2017  ஆவணி மாதம் 1 ஆம் தேதி வியாழக்கிழமை பின் இரவு சுமார் 02 – 33 மணி அளவில் ஏற்படும் இராகு - கேது  பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம்.

       கடந்த ஒன்றரை வருட காலமாக இராகு பகவான் உங்கள் இலாப பாவத்திலும் கேது – புத்திர ஸ்தானத்திலுமாக சஞ்சாரம் செய்து ஓரளவு           நல்ல பலன்களை வழங்கி வந்தனர். ஆவணி 1 முதல் கடக இராசியான கர்ம பாவத்துக்கு  இராகுவும், மகர இராசி, சுக பாவமான 4 ஆம் இடத்துக்குக் கேதுவும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு சஞ்சரிக்க உள்ளனர். இந்தப் பெயர்ச்சி மூலமாக இராகுவால் சுப பலன்களையும், கேதுவால் சுமாரான பலன்களையும் எதிர்பார்க்கலாம்.
       .
.
       பொதுவாக 10 இல் இராகு அசுப பலன் தருவதாகவே கூறப்படுகிறது. ஆனால், "பத்தில் ஒரு பாம்பேனும் இருக்க வேண்டும்", - என்ற பழமொழிப்படி இங்கு ஏறக்குறைய சுப பலனே ஏற்படும் என நம்பலாம். பல வழிகளிலும் புகழ், சுகம் ஆகியவை ஏற்படும். ஆனால் தமிழ் நூல்களின் கொள்கைப்படி சொத்துக்கள் கை தவறலாம். அரசாங்க ஆதரவு இன்றி, பதவி உத்தியோகத்தில் பிரச்சனைகள் எழலாம். இட மாற்றங்கள், பணி மாற்றங்கள் ஆகியவையும் ஏற்படலாம். செய்வினை, பில்லி, சூன்யம் போன்றவற்றால் அச்சம் ஏற்படலாம். மாரக தசை நடந்தல் பெற்றோருக்குக் கர்மர் செய்ய நேரலாம். கஷடங்களை, கவலைகளை மறந்து காசி யாத்திரை செல்ல்லாம். போஜன சுகம் குறைவதோடு, மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படுவதின் காரணமாக குழப்பங்கள் வரலாம். சிறுசிறு உபாதைகள் எழலாம். உயர்குலப் பெண்ணால் அவப் பெயர் ஏற்படலாம். தான தருமம் செய்வதால் கைப் பணம் கரையும். வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள் ஏற்படும். அனைத்திலும் இலாபமும்,  மகிழ்ச்சியும் குறையும். தேவையற்ற, ஆதாயமற்ற பயணங்கள் ஏற்படும். புகழ் மங்கும், பிறர் வழங்கும் மதிப்பு, மரியாதை எனத் துவங்கிய வாழ்வு இந்த வருடம் முன்னேற்றகரமாகவே இருக்கும். படிப்பை முடித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புக்கள் தாமதமாகவே கிடைக்கும். நிம்மதியான தூக்கம் இராது. கவன சக்தி குறைந்து, மனத் தெளிவும் மறைந்து குழப்ப நிலை தொடரும். எனவே, முதலில் சுப பலனும், பிற்ப்பகுதியில் அசுப பலனுமாக்க் கலந்து நடக்கும் எனக் கொள்ள வேண்டும்.

       ஜென்மத்திற்கு 4 இல் கேது வரும் போது காரணமின்றி எல்லாவற்றிலும், வீண் பயமும், சந்தேகமும் ஏற்படும். சூதாட்டாம், சூதாட்ட பேரம் போன்றவற்றில் பெரும் பொருள் இழப்பு ஏற்பட வாய்ப்பு ஏற்படும். எச்சரிக்கை தேவை. பூமி, மனை, சொத்துக்கள் கை தவறலாம். தீ விபத்துக்கள், வாகன விபத்துக்கள் ஏற்படலாம். எறவே, சமயலறையிலும், வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கை அவசியம். வயிறு, இதயம் ஆகிய உறுப்புகளில் நோய் ஏற்படலாம். சிலருக்கு அவரகளின் உருவமே மாறி வெறுப்பு ஏற்பட, அந்த வெறுப்பாலேயே துறவறம் பூணும் வாய்ப்பு ஏற்படலாம். பெற்றோர் உடல் நிலை பாதிப்புக் காரணமாக மருத்துவச் செலவுகள் கூடும். செய்தொழிலில் எதிர்பாராத தடங்கல்கள், கடன் பிரச்சனைகள், பொருளாதாரப் பற்றாக்குறை, வீண் அலைச்சல் போன்றவையும் ஏற்படும். கால் நடைகள், கோழி வளர்ப்பு போன்ற வகையில் இழப்புகள் அதிகம் இருக்கும். உடலில் விஷக்கடியினால் அலர்ஜி, அரிப்பு, வலியினால் வேதனை, நாய் கடி அல்லது வீட்டுக்குள் விஷ ஜந்துக்களான பாம்பு, தேள், பூரான் பொன்றவை விஜயம் செய்தல் ஆகியவை நிகழும். ஆனாலும் அதிக பயம் ஏற்படாது. கணவன் மனைவி உறவு சுகமாகவே இருக்கும். பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.

      குடும்பம் மற்றும் பொருளாதாரம் - ; பூமி வீடு மூலம் இலாபம் குறைவாகவே ஏற்படும். சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படலாம். தந்தையுடன் சுமுக உறவு இராது. நல்லுறவுகளின் அனுசரணையாலும் அன்பாலும், குடும்பத்தில் நிலவிய குழப்ப நிலைகள் சீராகும். சோம்பல்கள் விலகி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். புதிய பொறுப்புகள் வந்து சேரும். கணவன்மனைவி உறவில் குழப்ப நிலையே நிலவும். செல்வம் சேரும். திருமணம் ஆகாதவர்களுக்கு அழகிய மனைவி அமைவாள். தாமதப்படலாம். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். மனைவியின் பக்திமார்க்கம் உங்களின் மத உணர்வைத் தூண்டும்.
       தொழில் மற்றும் வியாபாரம் ;. சீரான பொருளாதார நிலைக்கு அனுகூலமான மாதமாகும்கோதுமை, கொள்ளு, பீன்ஸ் ஆகியவை ஆதாயம் தரும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு பதவி மாற்றம் அல்லது இடமாற்றம் ஏற்படலாம். எதிர்கால தொழில் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு விரிவாக்கத் திட்டங்களில் முதலீடுகள் செய்வது ஏற்றம் தரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு இருப்பினும், அவர்களை முழுமையாக நம்பிவிடாதீர்கள்.
      உத்தியோகஸ்தர்களுக்கு - அரசு ஊழியர்களுக்கு, மற்றவர்களுக்கு கட்டளையிடும் தலைமைப் பதவி கிடைக்கத் தாமதாகும். கீழே பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும், மேலதிகாரிகளின் அனுசரிப்பும் இருக்கும் எனச் சொல்வதற்கில்லை. மற்றவர்கள் உங்களைக் கண்டு பொறாமைப் படுவதோடு உங்கள் முன்னேற்றத்துக்கும் தடங்கல்களை ஏற்படுத்துவர். ஆரோக்கியக் குறைவு காரணமாக அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை எழும். பணி காரணமாக வெளியூர்ப் பயணங்களும் ஏற்படும்.
       பெண்களுக்கு ;- ஆன்மிகத்தில் ஈடுபாடும், அதன் காரணமாகக் குடும்ப முன்னேற்றமும் ஏற்படும். பணிபுரியும் பெண்கள் வீட்டிலும், பணியிலும் குழப்பமின்றி ஈடுபட்டு வெற்றிகளைக் குவிக்க முற்பட்டாலும் தடைகள் தவிர்க்க முடியாத்தாகும். வாகனங்களில் செல்கையில் வேகத்தைக் குறைத்து விவேகமாக ஓட்டினால் விபத்துக்களை தவிர்க்கலாம். கவனமுடன் செல்லுதல் அவசியம். சிலருக்கு அரசு உதவிகள் தாமதமாகும் உயர் அதிகாரிகளின் ஆதரவால் பணி உயர்வுக்கான பரிந்துரைகள் செய்யப்படலாம்.

      மாணவர்களுக்கு  ;-  முகநூல் மற்றும் வலைத் தளங்களில் பொழுதைக் கழிக்காமல் படிப்பில் கவனம் செலுத்தினால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெற இயலும். எனவே கவனமாகப் படிக்கவும். காலம் பொன் போன்றது. புதிய மாணவர்களுக்கு நேர்காணலில் வெற்றி கிடைத்தாலும், பணி நியமனம் தாமதமாகலாம். பல நேர்காணல்களை சந்திக்க  நீண்ட பயணங்களை மேற்கொள்ள நேரும். காதல் விவகாரங்களில் பல திருப்பங்கள் ஏற்படலாம்கல்வியில் உயர்வும்,  போட்டிகளில் வெற்றிகளும் குவியும் எனச் சொல்வதற்கில்லை.
       அரசியல்வாதிகளுக்குபல தடைகளுக்குப் பிறகு தனவரவுகள் சிறப்பாக இருக்கும். சிலருக்கு மக்கள் செல்வாக்கு திடீரெனச் சரியலாம். புகழும், கௌரவமும் மங்கும். தொண்டர்களின் உற்சாகம் தோள் கொடுக்கும். அவர்களுக்கும், மதிப்பு மரியாதையைக் காத்துக் கொள்ளவும் கை பணம் கரையும். தன் தகுதியை நிலைநாட்டிக் கொள்ள தேவையற்ற அலைச்சல்களும், திடீர் பயணங்களும் ஏற்பட்டும். தலைவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
       கலைஞர்களுக்குஎதிர்பார்ப்புக்கு மேலாக நல்ல பட வாய்ப்புகள் தேடிவருவது போல் இருந்தாலும், சிறிது இடைவெளிக்குப் பிறகே ஒப்பந்தமாகும். வெளியூர், வெளிநாட்டுப் படப்பிடிப்புகளில், பயணங்களின் போது தடைகளும், தாமதங்களும் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கேள்விக்குரியதாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். அரசு வகைத் தொல்லைகளை சமாளித்துவிடுவீர்கள்.  
       பரிகாரங்கள் – ஞாயிறு தோறும் இராகு காலத்தில் அம்பாளக்கு திருவிளக்கேற்றி பூஜிப்பது நல்லதி. சங்கடசதுர்த்தி அன்று விநாயகருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது சிறப்பு. திருப்பதி அருகிலுள்ள காளஹஸ்தி, கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஆகிய ஸ்தலங்களுக்கு ஒருமுறை சென்று வழிபடுவது நல்லது. கேதுவுக்கு கீழ்பெரும்பள்ளம் சென்று வழிபாடு செய்யுங்கள். சங்கரன்கோவில் சென்று புற்றுக்கு பால், பழம், வைத்து வழிபட்டுவிட்டு சங்கரநயினார் கோமதியம்பாளை தரிசிப்பது சிறப்பு.


விருச்சிகம்
( விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
       தைரிய காரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக இராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு 17/18 - 08 - 2017  ஆவணி மாதம் 1 ஆம் தேதி வியாழக்கிழமை பின் இரவு சுமார் 02 – 33 மணி அளவில் ஏற்படும் இராகு - கேது பெயர்ச்சி  தரும்  பலன்களைப் பார்ப்போம்.

       கடந்த ஒன்றரை வருட காலமாக இராகு பகவான் உங்கள் கர்ம பாவத்திலும் கேது – சுக ஸ்தானத்திலுமாக சஞ்சாரம் செய்து சுமாரான பலன்களை வழங்கி வந்தனர். ஆவணி 1 முதல் கடக இராசியான பாக்கிய பாவத்துக்கு  இராகுவும், மகர இராசியான 3 ஆம் இடத்துக்குக் கேதுவும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு சஞ்சரிக்க உள்ளனர். இந்தப் பெயர்ச்சியின் போது இராகுவால் சுமாரான ஆதாயங்களைப் பெறுவீர்கள். கேதுவால் நல்ல பலன்களையே எதிர்பார்க்கலாம்.

       இதன் காரணமாக இராகுவின் கோசார நிலை தன விரயம் தரும். நீங்கள் எடுக்கும் எந்த முயற்சியும், எவ்வளவு முயன்றாலும் ஈடேறாது. நெருங்கிய உறவுகள், பிடித்தமான நண்பர்கள் எவரையேனும் பிரிய நேரும். அதனால் கஷ்டங்களும், மனக் கவலைகளும் ஏற்படும். சிலருக்குக் கூடா நட்பால் கேடாய் முடியும். நல்லதை நினைக்காமல் பாவ காரியங்கள் செய்யவே சிந்தை செல்லும். சிலர் பிற மத ஒழுக்கத்தை பின்பற்ற நேரலாம். தரும புண்ணிய காரியங்களில் நாட்டம் இராது. சகோதரர் அல்லது தாய், தந்தை ஆகியோருக்குப் பீடை ஏற்படும். ப்ளாக் மேஜிக் எனப்படுகிற மாந்திரீகம், பில்லி, சூன்யம் போன்ற வித்தைகளில் ஈடுபாடு ஏற்படும். அரசு விரோதம், சுப அசுப விரயங்கள் ஏற்படும். பிறர் வாங்கிய கடனுக்கு பிணை ஏற்கக் கூடாது. சுலபமான காரியத்தையும் கடின உழைப்புக்குப் பிறகே  முடிக்க முடியும். சிலருக்கு பாக்கியம் பெருகும். புகழ் ஓங்கும். பணி உயர்வு கிடைக்கும். மனை, வயல் ஆகியவை சொந்தமாக்க் கிடைக்கும். வெளிநாட்டுப் பயணமும் அதனால் ஆதாயமும் கிடைக்கும் என சொல்வதற்கில்லை. குழந்தைகள் கல்வியில் தடங்கல்களுக்குப் பிறகு சிறந்து விளங்குவர். வீடு, நிலம் ஆகியவற்றை உடனடியாக்க் கிரையம் செய்வது அரிது. நல்ல வேலையைத் தேடிக்கொண்டு, இருக்கும் வேலையை விட முயற்சிப்பதே அறிவுடமையாகும். பெற்றோர்களின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படலாம். அதன் காரணமாக மருத்துவச் செலவுகள் கூடும். நண்பர், உறவினர்களுக்காக நீங்கள் தாராளமாகச் செலவழிப்பீர்கள். ஆனால், எவரையும் நம்பி ஜாமீன் கையெழுத்துப் போட்டு மாட்டிக் கொள்ளாதீர்கள். வம்பு வழக்குகளில் சிக்கிக் கொள்ள நேரலாம். எச்சரிக்கை தேவை. தொழிலில் மந்த நிலையே காணப்படும்.

       கேதுவால் பிறருடன் ஏற்படும் மோதல்களிலும், பூசல்களிலும் வெற்றி மேல் வெற்றி காண்பீர்கள். எதிரிகள் மறைவர் எதிர்ப்புகள் விலகும். எல்லாவகையிலும், எல்லா வழிகளிலும் பணவரவு மேலும் மேலும் உயரும். பல வகைகளிலும் பெரும் புகழும் ஓங்கும். எவர்க்கும் எவ்விதமான வாக்குறுதி கொடுத்தாலும், சொன்னது, சொன்னபடி மறக்காமல் நிறைவேற்றி விடுவீர்கள். மகாராஜன் போல் வாழ்வர். மனோதைரியம் கூடும்.  உற்சாகம் பொங்கும். எதையும் சமாளிக்க்க் கூடிய செயல் திறன் அதிகரிக்கும். இளைய சகோதர உறவு மேம்படும். அவரால் ஆதாயமும், உதவிகளும் கிடைக்கும். நல்ல உணவு, தூக்கம், தாம்பத்திய சுகம் என அனைத்து பாக்கியங்களும் திருப்திகரமாக இருக்கும். அவனுக்கு என்னடா ? இராஜா என உங்களைக் கண்டு மூக்கின் மேல் விரலை வைப்பர். குடும்பத்தில் திருமணம் போன்ற நற்காரியங்கள் ஏற்பட்டு சுகசெலவுகள் கூடும். கடன்கள் தீரும். வருமானம் பெருகும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மற்றும் ஆதரவால் நன்மை அடைவீர்கள். தீர்த்த யாத்திரைகள் சென்று திரும்புவீர்கள். சிலருக்கு மேக நோய்கள் ஏற்படலாம். எச்சரிக்கை தேவை. பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.

       குடும்பம் மற்றும் பொருளாதாரம் ; குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருப்பது போல் தோன்றும். செல்வம் சேரும். திருமணம் ஆகாதவர்களுக்கு அழகிய மனைவி அமைவாள். தாமதப்படலாம். மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமைந்தாலும், சில பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியது இருக்கும்பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். மனைவியின் பக்திமார்க்கம் உங்களின் மத உணர்வைத் தூண்டும். சகோதர நன்மை, வெற்றி மற்றும் சந்தோஷமும் உண்டாகும். சிலருக்குப் பிரிவும், வீண் செலவுகளும் ஏற்படலாம். உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற ஆதாயம் இராது. சாமர்த்திய சாலியாக விளங்குவார்.
      தொழில் மற்றும் வியாபாரம் ; எதிர்கால தொழில் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு விரிவாக்கத் திட்டங்களில் முதலீடுகள் செய்வதற்கு முன் ஆலோசித்துச் செய்தால் ஏற்றம் தரும். அரசு ஊழியர்களுக்கு, மற்றவர்களுக்கு கட்டளையிடும் தலைமைப் பதவி கிடைக்கும். ஆனால் தாமதமாகும். தொழில் மற்றும் வியாபார முதலீடுகளுக்கு வங்கிக் கடன்கள்  மிகுந்த பிரயாசைக்குப் பிறகே கிடைக்கும். அரசின் உதவிகள் தாமதமானாலும், கைகொடுக்கும்எதைச் செய்தாலும் சிரத்தையுடன் செய்தால் வெற்றி உண்டு. விவசாயப் பணிகள் சிறப்புற நடந்து ஆதாயம் பெருகும்
       உத்தியோகஸ்தர்களுக்கு – எவ்வளவு வேலை பார்த்தாலும் உங்கள் பணியில், மேலதிகாரிகளிடம் திருப்தி இருக்காது. அதன் கார்ரணமாக பணி இடமாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதுவே குடும்பத்தைப் பிரிந்திருக்கக் காரணமாகலாம். சிலருக்குப் பணிவிஷயமாக அடிக்கடி வெளியூர் பயணங்கள் ஏற்படலாம். எதிர்பார்த்திருந்த சம்பள உயர்வுகள் தடை, தாமதிற்குப் பிறகே கிடைக்கும். சிலருக்கு வாகன யோகங்கள் ஏற்பட்டாலும், அதில் எச்சரிக்கையுடன் பயணித்தால் விபத்துக்களைத் தவிர்க்கலாம். 
      பெண்களுக்கு; பணிபுரியும் பெண்கள் வாகனங்களில் செல்கையில் வேகத்தைக் குறைத்து கவனமுடன் செல்லுதல் அவசியம். சிலருக்கு அரசு உதவிகள் தாமதமாகும் உயர் அதிகாரிகளின் ஆதரவால் பணி உயர்வுக்கான பரிந்துரைகள் செய்யப்படலாம். யாத்திரையும், வெளிநாட்டுப் பயணங்களும் ஏற்படும். தொலைதூரச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். சிலருக்குத் தாங்கள் விரும்பாத இடத்திற்கு மாற்றம் ஏற்படலாம். குழந்தைகளின் தேர்ச்சி மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும்.
      மாணவர்களுக்கு -- வேலைக்கான நேர்காணலில் தாமத்த்திற்குப் பிறகே வெற்றி கிட்டும். அதன் காரணமாக நீண்ட, கடினமான பயணங்களை மேற்கொள்ள நேரும். காதல் விவகாரங்களில் பல திருப்பங்கள் ஏற்படலாம்கல்வியில் உயர்வும்,  போட்டிகளில் வெற்றிகளும் தடங்கல்களுக்குப் பிறகு வந்து குவியும். மாணவர்கள் அதிக அக்கறையுடன் படிக்கவேண்டும். கிரிக்கெட் ஆட்டங்களைக் கண்டால், கல்வியும் ஆட்டங்காணும். அவர்களின் கவனம் இன்ப நுகர்விலும், விளையாட்டுத் தனங்களிலும் ஈடுபட்டால் அறிவுத்திறனும், கல்வியில் தேர்ச்சியும் குறையும்
       அரசியல்வாதிகளுக்கு – தலைவர்கள் உங்களைப் புறக்கணித்தாலும், அடிமட்டத் தொண்டர்கள் உங்கள் மீது அன்பைப் பொழிவர். கௌரவத்துக்காகப் பிடிக்காத பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பீர்கள். ஆனால், அதன் மூலம் நல்ல பெயரும், புகழும், அதிக வருமானமும் வரும் என்பதால், நீங்கள் கவலையின்றி இருப்பீர்கள். உங்கள் துறை சம்பந்தமான பணிகள் சிறப்பாக நடந்தாலும், தடைகளும், தாமதங்களுக்கும் இல்லாமல் இருக்காது.
       கலைஞர்களுக்கு – நல்ல கதாபத்திரங்கள் கிடைக்கப் பெற்று, சிறப்பாக நடித்தாலும் நல்ல பெயர் எடுக்க முடியாது. பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும், அரசால் அதிக தொந்திரவுகள் இருக்கலாம். புதிய சொத்துக்கள் வாங்கும் முன் மூலப்பத்திரங்கள், வில்லங்க விவகாரங்களை அலசி ஆராய்ந்து பத்திரப் பதிவு செய்வது நல்லது. படப்பிடிப்பிற்காக வெளியூர், வெளிநாடு செல்கையில் தனி கவனத்துடன் செல்வது குழப்பங்களைக் குறைக்கும்.    
       பரிகாரங்கள் – காஞ்சிபுரம் அருகே அருள் பாலிக்கும் சித்திர குப்தரை வழிபடுவது சிறப்பு. சங்கடசதுர்த்தி அன்று விநாயகருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது சிறப்பு. திருப்பதி அருகிலுள்ள காளஹஸ்தி, கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஆகிய ஸ்தலங்களுக்கு ஒருமுறை சென்று வழிபடுவது நல்லது. கேதுவுக்கு கீழ்பெரும்பள்ளம் சென்று வழிபாடு செய்யுங்கள். சங்கரன்கோவில் சென்று புற்றுக்கு பால், பழம், வைத்து வழிபட்டுவிட்டு சங்கரநயினார் கோமதியம்பாளை தரிசிப்பது சிறப்பு.
தனுசு
 ( மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்ராடம் –1,2 பாதங்கள்)
    தேவகுருவான குருவை அதிபதியாகக் கொண்ட தனுர்ராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு 17/18 - 08 - 2017  ஆவணி மாதம் 1 ஆம் தேதி வியாழக்கிழமை பின் இரவு சுமார் 02 – 33 மணி அளவில் ஏற்படும் இராகு - கேது  பெயர்ச்சி  தரும் பலன்களைப்  பார்ப்போம்.
       கடந்த ஒன்றரை வருட காலமாக இராகு பகவான் உங்கள் பாக்கிய பாவத்திலும் கேது – தைரிய ஸ்தானத்திலுமாக சஞ்சாரம் செய்து மத்திமமான பலன்களை வழங்கி வந்தனர். ஆவணி 1 முதல் கடக இராசியான ஆயுள் பாவத்துக்கு  இராகுவும், மகர இராசியான 2 ஆம் இடத்துக்குக் கேதுவும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு சஞ்சரிக்க உள்ளனர். இந்தப் பெயர்ச்சி மூலமாக இராகுவால் சுமாரான பலன்களைப் பெறுவீர்கள். கேதுவால் மத்திமமான பலன்களையே எதிர்பார்க்கலாம்.

       இதன் காரணமாக இராகுவால் பரம்பரை சொத்துக்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும். மந்திர ஜாலங்களை பற்றிய அனுபவங்களை பெறுவீர்கள். பிறருடைய பணம், சொத்துக்கள் கிடைக்கும் வாய்ப்புகள் ஏற்படலாம். மனைவியிடம் பூர்ண படுக்கை சுகம் கிடைக்கும். மிகவும் நேசிப்புக்கு உரியவர்களின் பிரிவு அல்லது நோய் கண்டங்கள் ஏற்படலாம். வாழ்க்கையில் எல்லா வகையிலும் ஏதேனும் தொல்லைகள் எழலாம். பலவிதமான நோய்கள் காரணமாக கண்டங்கள் ஏற்படலாம். வாழ்க்கையில் ஓர் இனம் புரியாத பீதி இருந்து கொண்டே இருக்கும். கோர்ட் கேஸ் வகைகளில் பிறர் சூழ்ச்சியால் தோல்வியும் அதன் காரணமாக இழப்புகளும் ஏற்படலாம். எந்த்த் தொழிலிலும் ஈடுபடாதிருப்பதே நல்லது. ஏனெனில், ஈடுபடும் எதுவுமே ஒத்துவராது. மருத்துவர்களாலும் கண்ணுபிடிக்க முடியாத நோய்கள் ஏற்படலாம். காரியத்தடைகளும், வீட்டில் களவு போகுதல் ஆகியவையும் ஏற்படலாம். அரசியல் அதிகாரம் ஆகியவற்றைத் தருவார், கார் போன்ற நவீன வாகனங்கள் கிடைக்கும், பணம் பல வழிகளிலும் குவியும் என எதிர்பார்க்க முடியாது. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வதன் மூலமாகப் பொருளாதார நிலையை விருத்தி செய்யலாம். பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வர். தொழில், வியாபாரத்தில் முழுமையான ஈடுபாடு இருந்தால் மட்டுமே, போட்டிகளைச் சமாளித்து வெற்றிபெற முடியும்.

        கேதுவின் தனபாவ அமர்வு பணி இட மாற்றஙுகளைக் குறிகாட்டுகிறது. பொருளாதாரப் பின்னடைவுகள் மற்றும் கஷ்டங்கள் ஏற்படலாம். அன்றாட         வாழ்க்கையில் நடக்க வேண்டிய அன்றாடப் பணிகளில் தாமதங்களும், ஏமாற்றங்களும், கவலைகளை அதிகரிக்கும். கடன்களை திரும்ப அளித்தல், செலவினங்களை சரிக்கட்டுதல், தொழில் முனைதல் போன்றவைகளும் பாதிக்கப்படும்.    பலருடன் பகை உண்டாகும். சிலருக்கு அன்றாட உணவுக்கே கூட சிக்கலாகலாம். கிடைத்தாலும் தரங்கெட்ட உணவாகவே இருக்கும். நாக்கின் அடிப்பாகத்தில் புண்கள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி என்ன விலை என்று கேட்கக் கூடிய நிலை ஏற்படலாம். தொழில் வளர்ச்சி  நல்ல முன்னேற்றத்துடன் இருக்காது.  தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்காது. அரசு மூலம் வெகுமதிகள் மற்றும் பரிசுகள் கிடைக்கும். வெளிநாட்டு பயண வாய்ப்புகள் ஏற்பட்டு மகிழ்ச்சியை விட துன்பத்தையே அளிக்கும். மனைவி மக்கள் ஆரோக்கியம் பெருக மருத்துவ சோதனைகள் தேவைப்படலாம். பிறருடன் சுமுகமாக நடந்தால் பிரச்சனைகள் விலகும். மனைவியின் நடவடிக்கைகள் மகிழ்ச்சி தருவனவாய் இருக்கும். தேய்பிறை போல் நாளுக்கு நாள் சந்தோஷமும், செல்வமும் குறையும். வியாபாரத்தில்  உற்சாகம் குறைந்து தொய்வு நிலை காணும். அரசு அதிகாரிகளுக்கு  கட்டளையிடும் பெரும் பதவி கிடைத்தாலும், தொல்லைகளும் இருக்கும். பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.

    குடும்பம் மற்றும் பொருளாதாரம்  ;- ஆதாயமும் பெருகும். பணவரவு மற்றும் உத்தியோக லாபம் ஏற்படும் என்று சொல்வதற்கில்லை. பெண்களால் தங்கள் முன்னேற்றம் தடைப்படும். குழந்தைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். காரியங்கள் அனைத்தும் தாமத்த்திற்குப் பிறகே வெற்றி பெரும். கணவன் மனைவியடையே அன்பும் பாசமும் பெருகும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் மறைந்து களிப்பு உண்டாகும். புத்தி சாதுர்யத்தால் வாழ்க்கையில் பொருளாதார நிலை சீராக இருக்கும். குழந்தைகள் வகையில் சுபச்செலவுகள்   ஏற்படும்.
       தொழில் மற்றும் வியாபாரம் ;- வியாபாரிகள் புதிய முதலீடுகளை எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாமல் ஆராய்ந்து செய்வது நலம் பயக்கும். சுகமான பயணங்களால் இன்பம் பெருகும். ஞானம் பெருகும். பணியில் உள்ளவர்களுக்கு நிலுவைத் தொகைகள் வந்து சேரும். வியாபார நிலவரங்களுக்கு ஏற்ப புதிய நுணுக்கங்களைப் புகுத்தி வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். உதிரிப் பாகங்கள் அல்லது மென்பொருள் சாதனங்களின் விற்பனை சூடுபிடிக்கும்மதிப்புமிக்க மனிதர்களின் நட்பு கிடைக்கும்.
       உத்தியோகஸ்தர்களுக்கு – அலுவலக நண்பர்கள் அன்போடு கைகொடுத்தால் அனைத்திலும் வெற்றிவாகை சூடுவீர்கள். ஆயினும், பணிகளுக்கிடையே சிறுசிறு நெருக்கடிகள், கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும். உயர் அதிகாரிகளை அனுசரிந்து நடந்து கொண்டால் இன்னல்கள் ஓரளவு குறையும். புதிதாக வேலைதேடுபவர்கள் விருப்பப்பட்ட வேலை கிடைக்கவில்லை எனில் கிடைக்கும் வேலையில் சேர்ந்து கொண்டு அனுபவம் பெறுவது எதிர்காலத்துக்கு உபயோககரமாக இருக்கும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.
       பெண்களுக்கு ;- பதவியில் உள்ளவர்களின் தயவால் பயன் தாமதமாகவே ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்குப் பணியிடங்களில், தங்கள் விருப்பம் போல் இடமாற்றம் மிகுந்த பிரயாசைக்குப் பிறகு கிடைக்கும். வீட்டு மனைவிகள் போராடி தங்கள் கணவன்மார்களின் பரிபூர்ண அன்பைப் பெறுவர். பணிபுரியும் பெண்களுக்கு  மேலதிகாரிகளின் ஆதரவு மிகுந்த சிரமத்திற்குப் பிறகே கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். அரசுப்  பணிபுரியம் பெண்களுக்குப் பெண் உயர் அதிகாரிகளால் நெருக்கடி ஏற்படலாம்.   
       மாணவர்களுக்கு ;- மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி அதிகரிக்கும். சுயமுன்னேற்றத்துக்கான திட்டங்கள் தீட்டவேண்டிய காலமாகும். மாணவர்கள் தங்கள் முழுத் திறமைகளையும் வெளிக்காட்டுவர்மாணவர்களுக்கு அறிவுத் திறன் பெருகும். சிலருக்கு, கல்வியில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். உலகக் கோப்பை கிரிக்கெட், முகநூல், வலைத்தளங்களில் பொழுதைக் கழிக்காமல் படிப்பின் மீது கவனம் செலுத்தினால் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறலாம்.
       அரசியல்வாதிகளுக்கு – மக்களின் தேவைகளை அறிந்து, சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டாலே அவர்களின் முழுமையான ஆதரவு கிட்டும். தொண்டர்கள், நண்பர்கள், தலைவர்கள் என அனைவர் வகையிலும் செலவு செய்ய வேண்டியது தவிர்க்க முடியாததாகும். ஆயினும், இதன் காரணமாக ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளித்துவிடுவீர்கள். கட்சிக் கொள்கைகளைப் பரப்பும் விதமாக அடிக்கடி வெளியூர் சென்று சொற்பொழிவு ஆற்ற ஏற்படும் பயணங்களால் அலைச்சல்களும், அசதியும் ஏற்படும்.
       கலைஞர்களுக்கு – மக்களின் ரசனைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்வது உங்கள் திறமையையும், புகழையும் அதிகரிக்கும். இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்படாமல், முதலில் வரும் ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது உசிதம். அப்போதுதான் பொருளாதார நிலையை சீர் செய்த் கொள்ளமுடியும். சக நடிகைகளிடம் இருந்து விலகியே இருப்பது நல்லது. ஏனெனில், பின்னர் கிசுகிசுக்களால் மனவருத்தமும், மன அழுத்தமும் ஏற்பட வாய்ப்பு உண்டு.

       பரிகாரங்கள் – பிரதி செவ்வாய் கிழமை இராகு காலத்தில்  துர்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டால் வளம் பெருகும். துயர் அகலும். சங்கடசதுர்த்தி அன்று விநாயகருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது சிறப்பு. திருப்பதி அருகிலுள்ள காளஹஸ்தி, கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம்  ஆகிய ஸ்தலங்களுக்கு ஒருமுறை சென்று வழிபடுவது நல்லது. கேதுவுக்கு கீழ்பெரும்பள்ளம் சென்று வழிபாடு செய்யுங்கள். சங்கரன்கோவில் சென்று புற்றுக்கு பால், பழம், வைத்து வழிபட்டுவிட்டு சங்கரநயினார் கோமதியம்பாளை தரிசிப்பது சிறப்பு.