Thursday, August 2, 2018

குருப் பெயர்ச்சி பலன்கள் -2018 -19







குருப் பெயர்ச்சி பலன்கள் -2018-19

மேஷம்

(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்பரணி-1, 2, 3, 4 பாதங்கள்கார்த்திகை-1,2,3,4 பாதங்கள்)
       தைரிய காரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்டு தைரியமும், துணிவும், சுறுசறுப்பு மிக்க மேஷராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குருப் பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். பொதுப் பலன்கள், பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி நண்பர்களுக்கும் சீரான சிறப்பான பலன்களே அமையும்.

      தங்கள் இராசிக்கு பாக்ய, விரய பாவாதிபதியான குரு இதுவரை களத்திர  பாவமான  7 ஆம் இடத்தில் சஞ்சரித்து தற்போது புரட்டாசி மாதம் 18 ஆம் நாள், வியாழக் கிழமை, 04 – 10 – 2018 அன்று 8 ஆம் பாவத்திற்கு இடம் பெயர்கிறார். 7 ஆம் பாவத்தில் இருந்தவரை மணமாகாதவர்களுக்குத் திருமணம் சிறப்பாக நடந்திருக்கும். பிள்ளைகளால் பெற்றவர்கள் பெருமை அடைந்திருப்பார்கள்.  தொழில் துறையில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டிருக்கும். மனைவி மக்களுடன் வாழ்க்கை சந்தோஷமாகக் கழிந்திருக்கும். இந்த, குருவின் தற்போதைய ஆயுள் பாவ மாற்றத்தால் இம்மை எட்டில் வாலி பட்டம் இழந்து போம்படியானதும்’ – என்ற பழம் பாடலின்படி, இக் காலத்தில் பதவி, உத்தியோகம், கௌரவம் ஆகியவற்றில் இறக்கம், மாற்றம் அல்லது இழப்பு இவற்றில் ஏதேனும் ஒன்று நிகழலாம். .வியாபாரத்தில்  எதிர்பார்த்த இலாபங்கள் கிட்டாது, கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். கீழ்நிலையில் உள்ளவர்களின் சிநேகத்தால் அவப்பெயர் ஏற்படும். பயணங்களின் போது விபத்துக்களைச் சந்திக்க நேரும். எனவே, பயணங்களின் போது அதிக கவனத்துடன் இருங்கள். கோர்ட், வழக்கு போன்ற தண்டச் செலவுகளால் கைப்பணம் கரையும். பணமுடையும் ஏற்படும். தாள முடியாத மனக் கஷ்டங்களும், அதன் காரணமாக உடல் ஆரோக்கியம் கெடுதல் ஆகியவை ஏற்படும். காரியங்கள் எதுவும் நினைத்தபடி கை கூடாது. உடல் உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற இலாபமோ, பலனோ எதுவும் இராது. அக்னி விபத்து, அரச கோபம், சரீரக் கஷ்டம் ஆகியவை ஏற்படும். உடல் பலஹீனமும், சோர்வும் ஏற்படும்.   தேவையற்ற செலவுகள் ஏற்படும். கடன் வாங்கியவர்களிடம் இருத்து வரவேண்டிய பாக்கிகள், நிலுவையாவதால், பொருளாதாரச் சிக்கல்கள் எழும். தந்தை மூலமான விரயங்கள் தவிர்க்க முடியாத்தாகும். மனைவி மூலமான வருமானங்கள் தக்க சமயத்தில் கை கொடுக்கும். மனதளவிலும், உடலளவிலும் இன்னல்கள் எழும். சிலர் தங்கள் பழைய வீட்டை மாற்றி அமைத்து புதுப்பித்துக் கொள்ளக் கூடும். இளைஞர்களும், யுவதிகளும் தங்கள் காதல் விவகாரங்களால் பெற்றோர்களுக்கு மனவருத்தத்தை அளிப்பர்.
       குரு தனது 5 ஆம் பார்வையால் விரயபாவத்தைப் பார்ப்பதால், செலவுகள் அனைத்தும் சுப செலவுகளாக மாறும். வீட்டில் நடக்கும் சுபகாரியங்களால் செலவுகள் கூடினாலும், சந்தோஷம் நிலவும். வீடு கட்டுதல் போன்ற செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரம் என சம்பாத்தியம் காரணமாக வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடு செல்லவேண்டிய சூழல் உருவாகும். அதன் காரணமாக குடும்பத்தைப் பிரிய நேரும்.  உடன் பிறப்புகளுக்கு தொழில் மேன்மை ஏற்படுவதோடு, சிலருக்கு நல்ல வேலை வாய்ப்பும் ஏற்படும்.

      குரு தனது 7 ஆம் பார்வையால் தனபாவத்தை பார்வையிடுகிறார். அதன் காரணமாக குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்வுகள் அதிகம் ஏற்பட்டு சந்தோஷமான தருணங்களாக அமையும். காப்பீட்டுத் திட்டம் மூலமாகவோ, பங்கு சந்தை மூலமாகவோ ஆதாயங்கள் பெருகும். ஏதேனும் ஒரு வகையில் பிறரின் பணம் கையிருப்பு இருந்து கொண்டே இருக்கும். அரசாங்கம் மூலமாக வரவேண்டிய நிலுவைத் தொகைகள் உடனடியாகக் கிடைக்க வாய்ப்பு உண்டு. அரசியல்வாதிகள் தங்கள் உடன் இருப்பவர்களிடம் அதிகப்படியான எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி உறவு பலப்படும். தாம்பத்தியத்தில் மகிழ்ச்சி நிலவும்.

       குரு தனது 9 ஆம் பார்வையால் சுக பாவத்தை பார்வை செய்வதால் நோய்கள் தீர்ந்து ஆரோக்கியம் பெருகும். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமான செலவுகள் அதிகரிக்கும். வீடு மராமத்துச் செலவுகள், வாகனம் சரிசெய்யும் செலவுகள் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். சிலருக்கு வீடு கட்டும் ஆசை நிறைவேறும். மாணவர்கள் ஆராய்ச்சிக் கல்விக்காக வெளியூருக்குச் சென்று தங்கிப் படிக்க வேண்டிய சூழல் உருவாகும். மனையாளுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படும். வழக்குகள் வெற்றி அடைந்து முடிவுக்கு வரும். தாயின் ஆரோக்கியம் பெருகி, தந்தைக்கு மனமகிழ்ச்சி ஏற்படுத்தும்.

No comments:

Post a Comment