Sunday, September 2, 2018

குருப் பெயர்ச்சி பலன்கள் 2018-19 கும்பம்

குருப் பெயர்ச்சி பலன்கள் 2018-19 கும்பம்





கும்பம்

( அவிட்டம் – 3,4 பாதங்கள்சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
                ஆயுள் காரகனான சனியை அதிபதியாகக் கொண்ட மனித இனத்திற்கு சேவை செய்யும் மனப்பான்மையும், நியாயம் வழக்குவதில் சமர்த்தரும், ஆன்மிகத் துறையில் நாட்டமுடையவருமான  கும்பராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குரு பெயர்ச்சி  தரும்  பலன்களைப் பார்ப்போம். பொதுப் பலன்கள், பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி நண்பர்களுக்கும் சீரான சிறப்பான பலன்களே அமையும்.

       தங்கள் இராசிக்கு தனம் மற்றும் இலாப பாவத்திற்கும் அதிபதியான குருபுரட்டாசி மாதம் 18 ஆம் நாள், வியாழக் கிழமை, 04 – 10 – 2018 அன்று கர்ம பாவவமான விருச்சிகத்தில் அமர்கிறார். அதன் காரணமாக  ஈசன் பிரம்மனின் தலையைக் கொய்த தோஷத்திற்காக, கிள்ளப்பட்ட அவனின் தலை ஓட்டிலேயே அவர் பிச்சை எடுத்துத் திரிந்தார் என்பது பழம் பாடல்.  அப்படியிருக்க நாம் எம்மாத்திரம். அனைத்துக் காரியங்களுக்கும்  பிறர் தயவையே நாட வேண்டியிருக்கும்.  சிலருக்கு இதுநாள்வரை பார்த்துக் கொண்டிருந்த வேலையை விடவேண்டிய சூழல் எழலாம். சிலருக்கு இதுநாள்வரை வகித்து வந்த பதவி பறி போகலாம். பதவி உயர்வு கிடைக்க தடை, தாமதங்கள் கூட ஏற்படலாம். மனக்கவலைகளால் உடல் ஆரோக்கியம் கெட்டு, பல வியாதிகளுக்கு வழிவகுக்கலாம்.மாசினும் பணவரவுகள் ஓரளவு வந்து கொண்டுதான் இருக்கும். எவரை நம்பியும் கடன் கொடுக்க வேண்டாம். உங்கள் விருப்பங்கள் எதுவும் நிறைவேறாது. வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடு என ஊரைவிட்டுப் போகவேண்டிய சூழ்நிலை எழலாம். மனச் சோர்வால், உடல் சோர்வும் சேர்ந்து கொள்ளும். எதிலும் திருப்திகரமான வாழ்க்கை அமையாது. அரசு மூலம் எவ்வித ஆதாயங்களையும் எதிர்பார்க்க முடியாது. வியாபாரம், தொழில் புரிபவர்களுக்கு, போட்டிகள் அதிகமாகி உழைப்புக்கேற்ற இலாபம் இருக்காது. வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் வெறுப்பாய் இருக்கும். வீண் விவாதங்களால் பிறருடன் மனஸ்தாபம் ஏற்படும். கையிலுள்ள பணமெல்லாம் விரயத்தால் கரையும். உழைப்பு அதிகமாகி ஊதியம் குறையும். பொதுவாழ்வில் மற்றும் அரசியலில் இருப்பவர்களுக்கு கெடுபிடிகள், வேண்டாத டென்ஷன், எதிரிகளின் ஏற்றம் ஆகியவை காரணமாக இறங்குமுகமாக, முன்னேற்றம் எதுவும் இன்றி, பின்னடைவுகளைத் தரும். அவமானங்களும் ஏற்படலாம். அரசுப் பணியாளர்கள் உயர் அதிகாரிகளின் நெருக்கடி தாங்காமல் விடுமுறை எடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம். எனவே, அமைதியாக மருத்துவ விடுப்பு எடுத்து மனையிலேயே ஓய்வெடுப்பது டென்ஷனையாவது குறைக்கும். பெற்றோர்களின் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும்.

            குரு 5 ஆம் பார்வையாக தனபாவத்தைப் பார்வையிடுவது நல்ல நிலை ஆதலால் இல்லத்தில் இனிய விழாக்கள், சுபகாரியங்கள் சிறப்புற நடைபெறும்.பல வழிகளிலும் தனவரவு ஏற்படும். முன்னர் பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேர்ந்து இன்ப மயமான வாழ்க்கை வாழ்வர். உடன் பிறந்தவர்கள் வெளியூருக்குப் பிரயாணங்கள் மேற்கொள்வர். மாணவர்களுக்குக் கல்வி தொடர்பான விஷயங்களில் மேன்மை ஏற்படும். வக்கீல், மதபோதகர், ஜோதிடர் போன்ற வாக்கால் வருமானம் ஈட்டுவோருக்கு தேவைக்கு அதிகமாகவே வருமானம் வரும்.

       குரு 7 ஆம் பார்வையாக சுக பாவத்தைப் பார்வையிடுகிறார் அதன் காரணமாக புதிய நவீன வண்டி வாகனங்கள் வாங்குவீர்கள். புதிய மனை, வீடு ஆகியவற்றை வாங்கும் யோகம் ஏற்படும். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். உடுக்கை இழந்தவன் கை போல உயிர் நண்பர்கள் தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டுவர். ஆராய்ச்சிக் கல்வி படிக்கும் மாணவர்கள் வழிகாட்டுபவர்கள் உதவியுடன் மேன்மை அடைவர். உங்கள் வாழ்க்கைக்குத் துணைக்கு அவர்கள் கல்வித் தகுதிக்கு ஏற்ப புதிதாக, சிறப்பான, கைநிறையச் சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். வழக்கு, வியாஜ்யங்கள் உங்களுக்கு சாதகமாக வெற்றி பெறும்.  

      குரு தனது 9 ஆம் பார்வையால் ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தை பார்வை செய்கிறார். அதன் காரணமாக நீண்ட நாட்களாக இருந்துவந்த வியாதிகள் மருத்துவ முன்னேற்றங்களால் நன் முறையில் குணமாகும். இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் சமாதானக் கொடி பறக்கவிட்டு நட்பு பாராட்டுவார்கள். பகை மறைந்து புதிய நட்புகள் உருவாகும். மனைவியின் மனம் கோணாமல் ஆடம்பர பொருட்கள் அனைத்தையும் வாங்கிக் கொடுத்து மகிழவைத்து, மகிழ்வீர்கள். சமூகத்தில் தந்தையின் மதிப்பும், மரியாதையும் உயரும். அசையாச் சொத்துக்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.

        கும்ப இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி சுவர்ண மூர்த்தியாக முதல் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு சொர்ண ஆபரணங்கள், அணிகலன்கள் சேர்க்கை உண்டாகி நன்மை அளிக்கும்.    பொது மற்றும் சிறப்பு விதிகளின்படி இவர்களுக்கு  நற்பலன்கள் ஏற்படும். 80%


       ஒவ்வொரு வியாழக் கிழமையும், குரு ஹோரையில், தொடர்ந்து 12 வாரங்கள் குரு ஸ்தோத்திரத்தை 108 முறை பாராயணம் செய்து, மஞ்சள் வர்ண மலர்களால் அர்ச்சித்து வழிபாடு செய்ய நற்பலன்கள் சித்திக்கும்.




No comments:

Post a Comment