Wednesday, May 6, 2020

பிறப்பின் இரகசியம் 3


பிறப்பின் இரகசியம் 3

கரு-ஜாதகத்தில், துவாதசாம்சத்தில் சந்திரன் உள்ள இராசிவரை எண்ணவும், அங்கிருந்து, அந்த எண்ணை, எண்ணி வரும் இராசியோ அல்லது மேஷ இராசியிலிருந்து எண்ண வரும், இராசியோ, பிறப்பு ஜாதக இராசியாக அமையும்.

49 – கரு. லக்னத்தின், நவாம்சம், மகரம் அல்லது கும்பமாகி, கரு லக்னத்தில் சனி இடம் பெற அந்த ஜாதகிக்கு, மூன்று வருடங்களுக்கு, எவ்வித குழந்தைப் பிறப்பும் நிகழாது.

     அதேபோன்று, கரு.இலக்னத்தின் நவாம்சம் கடகம் ஆகி, சந்திரன், கருஇலக்னத்துக்கு 7 ஆம் இடத்தில் இருக்க, 12 வருடங்களுக்கு குழந்தைப்பிறப்பு அவர்களுக்கு இருக்காது.

50 – 51 – கரு இலக்னம் பகல் இராசியில் இருந்தால், பிரசவம் பகலில் ஏற்படும். இரவு இராசியில் இருந்தால், பிரசவம் இரவு நேரத்தில் ஏற்படும். கரு இலக்னம் கடந்த பாகை அளவு, விநாழிகையைக் குறிகாட்டுகிறது.(விநாழிகை = 24 நி. ) இந்த பாகை கடந்த பின் பிறப்பு ஏற்படும்.(சூரிய உதயத்துக்கோ\அஸ்தமனத்துக்கோ) கரு இலக்னத்துக்கு எந்த இராசியில், சம்தாம்ச லக்னம் விழுகிறதோ, அந்த எண்ணிக்கையை. மேஷத்தில் இருந்து எண்ண வரும் இராசியே, பிறப்பு இலக்னமாக அமையும். எனவே, இவ்வாறாக கரு இலக்ன பாகையை வைத்தே, பிறப்பு நேரத்தைக் கணக்கிடலாம்.

52 – திறமை மிக்க ஒரு ஜோதிடன், முதலில் சரியான நேரத்தை அறிந்து ஜாதக கணிதம் செய்ய வேண்டும். அதாவது, கருத்தரித்த, மற்றும் குழந்தை பிறந்த சரியான நேரத்தை அறிந்திருக்க வேண்டும். அதன், பிறகே ஜாதக கணிதமும், பலன் உரைத்தலையும் மேற்கொள்ள வேண்டும்.

53 – 55 – கரு இலக்னம் சிம்மமாகி, அங்கு சூரியன், சந்திரன் இணைந்து இருந்து, செவ்வாய், சனியால் பார்க்கப்பட்டால், பிறக்கும் குழந்தை குருடாகப் பிறக்கும். சூரியனும், சந்திரனும் இலக்னத்தில் இருந்து, சம அளவு, சுப மற்றும் அசுப கிரகங்களால் பார்க்கப்பட்டால், குழந்தையின் கண்களில், பூ விழுந்திருக்கும். அதன் காரணமாக குழந்தை கண் தெரியாததாகப் பிறக்கும். பலமிழந்த சந்திரன் 12 ஆம் இடத்தில் இருந்து, அசுப கிரகத்தால் பார்க்கப்பட, ஜாதகர், இடதுகண்ணை இழந்தவர் என குறிகாட்டப்படுகிறது. இதே, நிலையில் சூரியன் இருக்க, வலது கண்ணை இழந்தவராவார். இதே, நிலையில் இக் கிரகங்கள் சுபரால் பார்க்கப்பட்டால், குறிப்பிடப்பட்ட கண்களில் பிரச்சனைகள் இருக்குமேயன்றி, குருட்டுத் தன்மை இருக்காது. .

56 – கண்டாந்த சந்தியில் ( கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய இராசிகளின் கடைசி 3 பாகையில்) அசுப கிரகங்கள் இருந்து, ரிஷபத்தில் சந்திரன் இருந்து, செவ்வாய், சனி, சூரியன் ஆகிய கிரகங்களால் பார்க்கப்பட்டால், ஜாதகர் ஊமையாகப் பிறப்பார். எனினும், சந்திரன் பலம் மிக்க சுபரால், பார்க்கப்பட்டால், ஜாதகருக்கு பேச்சுத் திறன் தாமதமாக ஏற்படலாம்.

57 – கடகம், விருச்சிகம் மற்றும் மீனத்தின் கடைசி நவாம்சத்தில் அசுபக்கிரகங்கள் இடம்பெற, சந்திரனுக்கு சுப பார்வை ஏற்படவில்லை எனில், ஜாதகர் வடிகட்டிய முட்டாளாக இருப்பார்.

         புதனின் நவாம்சத்தில், சனி அல்லது செவ்வாய் இருக்க, பிறக்கும் பொழுதே அக் குழந்தைக்கு பற்கள் இருக்கும்.

58 – 59 - வித்தியாசமான இரட்டையர் – கருத்தரிக்கும் நேரத்தில், புதன், 5 அல்லது 9 ஆம் இடத்தில் இருந்து, மற்ற கிரகங்கள் எல்லாம் பலம் இழந்து இருக்க, இருதலை, நான்கு கால்கள் மற்றும் நான்கு கைகளைக் கொண்ட விநோத பிறவி அவதாரம் எடுக்கும்.

குள்ளமான பிறவி – மகரம் – கரு லக்னமாகவும், கன்னி நவாம்ச இலக்னமாகவும் இருந்து, இலக்னம், சூரியன். சந்திரன் மற்றும் சனியால் பார்க்கப்பட, ஜாதகர் குள்ளமானவராக பிறப்பார்.

கூன் விழுத்த பிறப்பு – கடகம், இலக்னமாகி, சந்திரன் அதில் இடம் பெற்று, செவ்வாய், சனியால் பார்க்கப்பட்டால், அந்த ஜாதகர் கூன் விழுந்தவராகப் பிறப்பார்.

60 - முடமான கால்களை உடைய பிறப்பு – மீனம் கரு லக்னமாகி, சூரியன். சந்திரன் மற்றும் செவ்வாயால் பார்க்கப்பட, முடவன் பிறப்பான்.

61 – இலக்னத்தின் முதல் திரேகாணத்தில் செவ்வாய் எழுந்து, சூரியன்,சந்திரன் மற்றும் சனி பார்வை பெற்று, மற்ற கிரகங்கள் பலமற்று விளங்க, பிறக்கும் ஜாதகருக்கு, தலையில் பிரச்சனை இருக்கும் அல்லது முட்டாளாக இருப்பார். அதுவே 2 வது திரேகாணமாய் இருந்தால் கைகளில் பிரச்சனை இருக்கும், இதே யோகம் 3 வது திரேகாணம் ஆனால் கால் முடமாய் பிறக்கும்.

62 – மேற் சொல்லப்பட்ட யோகங்கள் அத்தனையுமே, கருத்தரிப்பு ஜாதகம், பிறப்பு ஜாதகம், பிரசன்ன ஜாதகம் ஆகியவற்றுக்கும் பலன் கூற பயன்படுத்தப்படலாம். 

 


No comments:

Post a Comment